எதையோ தேடி எதுவோ கிடைக்கும்
இதுதான் வாழும் வாழ்வின் குணமா ?
மெதுவாய் காதினில் விழும் கேள்விக்கு
பதில் யார் சொல்வார் மவுனமா ?
கல்லாய் இருந்தால் சிலையாய் மாறும்
உளியுடன் சிற்பியும் உடன்வரும்போது
சில்லாய் போனதும் மண்ணாய் போவதும்
கலியுடன் வஞ்சனை பயின்றிடும்போது
ஓடையும் தேங்கிடும் நீரலையாவும்
நதியில் சேர்ந்தால் கடலாய்மாறும்
இடையில் கெட்டவர் கூட்டினிலோட
சாக்கடையானால் யாருக்கு சேரும்
ஆணாய் பெண்ணாய் நல்லறமானால்
வானில் ஆண்டவன் சந்நிதியுண்டு
வீணாய் போகிட மனதுடன்போனால்
கற்றது எல்லாம் கசடையின்துண்டு
வலியுடன் பெற்றவள் அழுதிட்டாலும்
வலிவுடன் தந்தை புலம்பிட்டாலும்
கல்வியை தந்தவர் சலித்திட்டாலும்
ஆண்டவன் கணக்கில் எதிர்மறையாமே
பொய்யும் புரட்டும் நம் துணையாயின்
போதாகாலம் முன்வரலாகும்
சூழ்ச்சியும் கயமையும் பணியாளாயின்
வீழ்ச்சியும் தள்ளிவிட தயங்காது
மாசுடை மனதும் வஞ்சமும் நட்பா
மடியும் தருணம் கைகொடுக்காது
ஆசையும் மாயையும் உன்வரவேற்பா
ஓசையிலாது ஆண்டவன் முடிப்பான்
வாழ்க்கை என்பது பள்ளியறையாம்
வாழ்க்கை என்பது அறகலைத் துறையாம்
வாழ்க்கை பெற்றதும் நமக்கொரு பாத்திரம்
வாழ்க்கை பயனென் அரியது பத்திரம்

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்