(வெண்டுறை பாக்கள்)
மண்ணாய்ந்து கையளந்து வாயினிலே களித்து
விண்ணாய்ந்து காலளத்து முவ்வுலகை அளித்து
கண்ணாய்ந்து கோபியரின் காதலுளம் பழித்த
அண்ணாந்து மலைநின்ற பெம்மான்
மலைவண்ணம் கண்டவர்க்கு பிரமாண்ட தெரிவதாம்
சிகைவண்ணம் கண்டவர்க்கு முகில்கூட்ட பொழிவதாம்
நகைவண்ணம் கண்மூடி மண்வரைந்த வதனம்
இமைவண்ணம் இமையார்க்கு அரிது
திருமலை என்பாரும் எழுமலை என்பாரும்
குருமலை என்பாரும் கோவிந்தா என்பாரும்
ஒருமலை நுனிவிரலில் தூக்கியே காத்தவன்
உருமலை தோற்றமே அறிவாரோ
நாமம் குழைத்து நெற்றியில் இட்டாலும்
நாமம் நினைத்து நாவினில் அழைத்தாலும்
நாமம் மறந்து நற்றாளில் விழைந்தாலும்
நாமும் கோவிந்தா என்பதே
நிலவன்னை சீனிவாசன் ஈன்றெடுத்த கதையும்
நலகொண்டு பதுமவதி மணமுடித்த பின்னும்
மலரன்னை மலையடியில் அறிவதெலாம் அடியோரே
மலையேதான் மாலவன் வடிவு

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்