Saturday, 28 October 2017

பஞ்சாட்சர கவசம்

நங்கையாம் மீனாளின் சொக்கனாய் ஆள்பவன்
நம்பியாய்த் தருவாகி சதாசிவம் ஆனவன்
நந்தியும் துதிபாட நடராசன் ஆட அவன்
நகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
மந்தாகினி கங்கை சடைமீது தரித்தவன்
மலைமகளை சரிபாதி தனதென்று வரித்தவன்
மறையோரின் ஓதுகுழாம் புடைசூழக் களித்தவன்
மகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
சிறக்கின்ற பிறைசூடி சிவமென்று நிலைத்தவன்
சிரிக்கின்ற கயிலாயப் பனிப்பொழிய குளிர்ந்தவன்
சிங்கார அரவுதனை அணியாக்கி மகிழ்ந்தவன்
சிகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
வானோரின் தலைவனாகி மகாதேவ மிறையவன்
வாசங்கள் வீசும்நல்ல திருநீற்றில் ஒளிர்பவன்
வாக்கோடு கணபதி வடிவேலன் பெற்றவன்
வாகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
யமபயம் அழித்துடனே மரணத்தையே அழித்தவன்
யட்சரும் அரக்கருமே தவமியற்ற அருள்பவன்
யமுனைக் கரைதனிலே தனைக்காட்சி கொடுத்தவன்
யகாரம் ஒலியாகி யெமைக்காக்க காக்க
நமசிவாயமென இசையொழுக பாடினேன்
நமசிவாயமென மனமுருக ஓதினேன்
நமசிவாயமென குருமுகமே நாடினேன்
நமசிவாயமென அருளோச்சி காக்கவே!!

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்