Saturday, 28 October 2017

பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

  கணபதி நின்பொற் தாளடி சரணம்

ரிதிசித்தி நிம்மதி தா

ஆழ்வார் அடிபற்றி அருட்பக்தி பெற்றாரும்
தாழ்வாரோ இவ்வையகத்தே

சக்தியை தந்துநல் சாந்தமும் தந்து
பக்தியை தந்துதிரு மகளுடன்சேர்
யுக்தியை தருமுன் அருள்கொண்டபின்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

நிறைவுடை  மனதும் குறைவிலா தனமும்
மறைதரு நாவும் நவின்றிடும் குணமும்
இறையென தினமுன் தரிசனம் தந்தபின்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

ஜாதகம் ராசிகள் கோள்களும் காலமும்
சாதகம் ஆக்கிடும் சங்கதி அறிந்தவன்
காதகம் மந்திரம்  நாமமாய் ஓதியும்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

அலையிலா ஆழியில் அரண்மடி யோகமும்
மலையதன்  ஏழினில்  நின்றருங் கோலமும்
நிலையிது எனதினம்  எழிலதை காட்டினாய்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

அருவியாய் அனுதினம் அருள்தர விழைந்து
கருவியாய்   இயங்கி  நேரலைத் தருவித்து
மருவியான்  மகிழவே திருவிழா  காணவைத்தும்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

மாதவா கோவிந்தா  கோபாலா திரு
மாலவா அச்சுதா அனந்தா கிருஷ்ணா
கேசவா நாராயணா எனக்கொஞ்சியபின்னும்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

திருமகள் உடன்மகிழ் திருநிவாசா என்றன்
இருதய    மலர்வளர்    அலர்மங்கை நாதா
ஒருமுக  மாயெனது உள்ளே கொலுவிருக்க‌
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !


செப்பியதும் நீயாவாய் செபிப்பதும்  நீயாவாய்
தப்பியதும்    நீயாவாய்  தவிப்பதும்  நீயாவாய்
அப்பியதும்  களபமாய்  ஆக்கியதும் நீயாயின்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !

அழகானக் கண்களில் அலங்காரம் நீயானாய்
பழகாத  நாவினிலோ பைந்தமிழ் நீயானாய்
நிழலாக வந்தெனக்கு உயிரானாய் உறவானாய்
குழலாக என்னை இசை
(இதை  எழுதிய மூன்றாம் நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது ! வேங்கடன் தில்லிக்கு வந்து தரிசனம் தரும் செய்தி  ..எட்டு நாட்கள் வைபவம் அவனுக்கும் எனக்கும் தான்..ஸ்ரீ வேங்கடேசாய நம:)

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்