Tuesday, 6 December 2022

கார்த்திகை பாவாய் பதிகம்

     கார்த்திகை பாவாய் பதிகம்


06 12 22  சத்தியமணி 


கார்த்திகை அகலொளியில் சிரிப்பானே எம்பாவாய்

கண்களென சுடரெடுத்து பார்ப்பானே எம்பாவாய்

கனலாய் தொட்டுவிடின் சுடுவானே எம்பாவாய் 

கழலைப் பிடித்துவிடு 

துதிபாடு எம்பாவாய் ....1


சாற்றும் மாலையெலாம் வாசமுறும் எம்பாவாய் 

ஏற்றும் திருவிளக்கு ஒளிசேர்க்க எம்பாவாய்

கூற்றும் மெய்யாகும் நலம்நல்கும் எம்பாவாய்

ஆற்றல் பெருகிவிடும் அடிபணியாய் எம்பாவாய்..2


இல்லறம் நலமாகும் இவ்வொளியில் எம்பாவாய்

இல்லம் ஒன்றாக்கும் இன்பம்வரும் எம்பாவாய்

உள்ளம் இருள்நீங்க உடனேற்று எம்பாவாய்

கள்ளம் வஞ்சமெலாம் பொடியாகும் எம்பாவாய்..3


கோவர்த் தனம்பிடித்து குடையானான் எம்பாவாய்

கோபியரின் கருவிழியில் ஒளிர்வானே எம்பாவாய்

காதற்பெருகும் மனம் 

கைகளிலே எம்பாவாய்

கண்ணன் மணம்நேர விளக்கேற்று எம்பாவாய்...4


தப்பினை செய்யாது தவறாதே எம்பாவாய்

நப்பின்னை நாரணனை நாவேற்று எம்பாவாய்

நாராயணாய நம அரிஓமென எம்பாவாய் 

இரண்டதை ஒன்றாக்கும் இரகசியமே எம்பாவாய்...5



அடிமுடி அறியாத அருந்தீபம் எம்பாவாய் 

அண்ணா மலைமுடியில் காப்பானே எம்பாவாய்

சிவயநம நமசிவய செப்பிவிடு எம்பாவாய் 

வயநமசி யமநசிவ செபிக்கையிலே எம்பாவாய்..6


அகத்தினை அகலாக்கி 

பக்திவிடு எம்பாவாய் 

அழகனை முருகனென

பழகவிடு எம்பாவாய்

வேலானத் தீபமதில்

ஒளிபிறக்க எம்பாவாய்

சரவண பவனனுக்கு 

முன்வருவான் எம்பாவாய்..7


விழிகளைச் சுடராக்கும் கெளரியவள் எம்பவாய்

வித்தைகளும் பதவிகளும் தருவாளே எம்பாவாய்

ஐயும் கிலியும் நமக

செளமென்றும்  எம்பாவாய்

குங்குமத்தில் அர்ச்சிக்க

மங்களங்கள் எம்பாவாய்..8


இரண்டாய் இருந்தாலும் ஒன்றாவான் எம்பாவாய் 

ஒன்றில் பலவாகி விரிந்தானே எம்பாவாய் 

நன்றாய் உள்வாங்கி நாவெல்லாம் எம்பாவாய்

குன்றாய் கோபுரமாய் உனையாக்கு  எம்பாவாய்..9


நினைக்கின்ற பக்தருக்கு அதுபோலே எம்பாவாய்

நிறைந்திடவும் அருட்தரவும்

விளக்கேற்று எம்பாவாய்

சாட்சிதரும் சனாதனம் தர்மநெறி எம்பாவாய்

கார்த்திகைப் பதிகம்படி

நற்பவியே எம்பாவாய் ...10 


சரணம் 

அருட்பெரும் சோதியை ஆதியந்த மிலாயிறையை

ஐம்பூதத் துறைபவனை

அண்டவெளி நிறைந்தோனை 

அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாபெரும் பேரரறிவை 

மாயையிலா நிர்மலத்தை மனதீபமேற்ற பிறவியறு






Saturday, 3 December 2022

சக்கரம் ஏந்திடவா

 எத்தனை எத்தனை பிறவிகளில் எனைத் தொடர்ந்தாய் கண்ணா

அத்தனை அத்தனை தவப்பலன் சேர தந்தமணி வண்ணா ()


கம்சனும் கலியும் ஒரு குலமே 

இம்சைகள் தொடர்ந்திடுமே

வம்சமும் வஞ்சமும் துயர் தருமே 

தொல்லைகள் துயர்தருமே

கல்வியின் சாலைகள் முழுவதுமே கள்வெறி போதையிலே 

தொல்பொருள் கோபுரம் கோயில்களும்

அழிந்திடும் வேளையிலே ( ) 

இழுக்குகள் யாவையும் அலங்கரித்து விருதுகள் வழங்குவதா

அழுக்குகள் யாவையும் பொய்யுரைக்க அழகெனச் சொல்லுவதா

வழக்குகள் குற்றங்கள் வளர்த்திடவா 

நீதியை நசுக்கிடவா

பழக்கமும் பிரிவினை   வளர்ப்பதிலா

கழிவுகள் உண்பதிலா

கலக்கமுற இங்கு கலங்குகிறோம் சக்கரம் ஏந்திடவா ()

Thursday, 1 December 2022

சிக்கினேன்

 சிக்கினேன்       கீர்த்தனை 

ராகம்  பைரவி

(சத்தியமணி)



சிக்கினேன் திருவடியில் 

சிக்கென பிடித்து கொண்டேன் 

மக்கென விலக்காது அருள்தரவேணும் சங்கரி ( ) 


திக்கெலாம் ஒளியாய் நிறைந்து நிற்பவளே 

பக்கமே வந்தெனை பாடவைப்பவளே   ( ) 



முக்காலமும் அறிந்த பரமனின் வலபுறமே 

இக்காலம் இனிதென விரைந்திட வரம்தரவே

பக்தனாய் பார்க்காமல் பிள்ளையாய் மீனாட்சி 

எக்காலமும் வெற்றியே அருள்வதே உன்காட்சி ( )