Thursday, 19 December 2013

கண்டேன் கண்டேன் காண்கின்றேன்

கண்டேன் கண்டேன் காண்கின்றேன்
கண்களுக்கினியானய் காதற்பெருக்கினால்()
வண்டுகள் விழியத‌னாற் மனங்குடைந்தான்
உண்டுகள் அதரங்கள் வழிந்திட அழைக்கிறான்
கண்டுமுன் காணாமல் நடிக்கிறான்
நண்டுதன் கொடுக்குபோல் வாரியே அணைக்கிறான் ஆகா ()
அசைந்திடும் மயிற்பீலி வசமிடதொடுத்தான்
இசைத்திடும் குழல்ராகம் மயக்கிட சிரித்தான்
பசையினில் என்னுடன் கலந்து களிக்கிறான்
விசையெனும் பக்தியில் என்னையும் இயக்கினான் ஆகா ()
தேடிடும் போதெதிர் வந்தெழில்ரசிக்கிறான்
ஏடிடும் முன்இவனே கவிதைப் படிக்கிறான்
கூடிடும் தாளமும் தட்டிதலை அசைக்கிறான்
பாடிடும் என்னோடு கண்ணனும் இருக்கிறான் ஆகா ()

செம்பொன் சோதீசன் பதிகம்

(இலாலாப்பேட்டை, குளித்தலை கரூர் இணைக்கும் சாலையில் உள்ளது. எனது இளம்பிராயம் அங்கு தான் அனுபவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைப் பணியில் கோயில் இடம்மாறி புதுபிக்கப்பட்டுள்ளது. இயற்கை வளம் கொட்டிகிடக்கும் இக்கிராமத்தில் அருள்வல நாயகனை கண்டு தரிசனம் செய்ய இப்பதிக காணிக்கை.)
நாமம்
அகண்ட காவிரியின் தென்கரைச்    சீலமாக்க‌
உகந்த     நிலமென்று  உமையோடு குடியமர‌
முகர்ந்த மலர்கதம்ப  மல்லிகை      மாலைசூடி
சகண்டை நாதமோடு செம்பொன்   சோதீபோற்றி

நிலம்
கீழ்திக்கில்        கடம்பராக‌     தென்கீழ்     ரத்தினக்கிரி
தென்திக்கில்    சொக்கனாய் தென்மேல் நாமகிரி
மேற்திக்கில்      கொடுமுடி    வடமேற்கு ஞானகிரி
வடதிக்கில் கொள்ளிசித்தன் ஈசானம்  மரகதகிரிவாழி

தலம்
வாழைதன் தோட்டமோடு தென்னைசூழ்  பச்சையாக‌
தாழையின் வாசம்சேர்     தளிர்வெற்றி    லைப்பாக்கு
பேழைவயி ற்றெடுத்த     பெரும்பிள்ளை வேலனோடு
மாழையாய் செம்பொற்   சோதியான்  பாதம்போற்றி

தீர்த்தம்
தவமுடை முனிவரோடு     சித்தரும் குழுமிநிற்க‌
சிவசிவ       நாதமோடு          நந்தியும்  ஓதிநிற்க‌
புவனமும் பொன்னியோட‌   செம்பொன்  துறைசேர்
ப‌வனமும் அணியுமாக    பல்வினைப் போகுமாமே

விருட்சம்
பொன்னியில் தலைமூழ்கி புதுகுட நீரெடுத்து
பொன்னீசன்   குளிரவென   அபிடேகம் செய்வித்து
பொன்மஞ்   சற்மலரோடு    வில்வத்தால் பூசித்து
பொன்சடை யேற்றிபாடு குலம்வாழச் செய்யுமாமே

அருள்
நம்பிக்கை பக்திநேச‌ம்    தருமமொடு   வாய்மையுமே
கும்பிடும்  அன்புநேயம்  குறைகாணா  பிறைசூடன்
அம்பரத் தாடுவான்முன் அனைத்தோடு துதிசெய்யாய்
பம்பர  மனதடங்கி பல்காலம் நலங்காண்பாய்

மகிமை
திருநீறு தரித்துவரின்     அறிவோடு நலமேறும்
திருநீறு அணிந்துவரின்  கேடுதசை மாறிவிடும்
திருநீறு பூசிவரின்    பெருநோயும் ஓடிவிடும்
திருநீறு குளித்துவரின் தீராதவினைத் தீறும்

வாழ்த்து
வாழியச் செம்போற்சோதி வாழிய தருமவர்த்தனி
வாழியத் தொண்டர்குழாம் வாழிய தருமநெறி
வாழிய    வையகமும்   வாழிய இந்நிலமும்
வாழிய   கங்கையென வற்றாமல் பொன்னியுமே!!

மகாகவி பாரதியும் மெகா தொடர் பாரதமும் (பண்டார பாட்டு - 2013)


அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இலவசங்கள் பெற்றும் மாற்றி ஓட்டுபோட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
வாக்குறுதி அத்துனையும் மறந்து விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
வரிக்குமேல் வரிகள் போட்டு வசூலித்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
சேதுசிதைத்து ஈழம்பிரிந்து வாடுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பெரும்பாண்மை பெற்றும்பின்னர் சிதறுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இலஞ்சமென்று ஆயிரந்தான் தெரிந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
காவிரியா கங்கையுமே காயவைத்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
சாதிகள் சொல்லி கட்சி கூட்டம் சேர்க்கும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
தங்கத்தாலி பறிகொடுத்து தவிக்குங்குரல் கேட்கினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
ஒற்றுமைக்கு வேட்டு வைத்து ஒழுக்கம்வீழும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
டாலர்ஏற ரூபாயிங்கு சரியவைக்கும் போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
மின்வெட்டு விலைகளிங்கு வானைத்தொட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
அடிக்கடி தேர்தல் என்று  அசிங்கம் பட்ட போதிலும்

மிச்சமில்லை வெட்கமில்லை  சொல்வதற்கு இல்லையே